தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவிற்காக நேற்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ., தொலைவில் மஞ்சளாற்றங்கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலஸ்தானம் என்னும் குச்சிவீட்டின் கதவு திறக்கப்படுவது இல்லை. அடைக்கப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. பக்தர்கள் வழங்கும் நெய்யினால் ஆண்டு முழுவதும் இரவு, பகல் அணையாத நெய்விளக்கு எரிகிறது. மாசி மகா சிவரத்திரி திருவிழா பிப்ரவரி 17 ல் துவங்கி தொடர்ந்து ஒரு வாரம் நடக்கும். திருவிழாவிற்காக நேற்று சிரார்த்தம் செய்யப்பட்டு பின்னர் முகூர்த்தக்கால் நடப்பட்டது. பரம்பரை அறங்காவலர் தனராஜ்பாண்டியன், பரம்பரை நிர்வாக அறங்காவலர் கனகராஜ்பாண்டியன், செயல் அலுவலர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.