பதிவு செய்த நாள்
27
ஜன
2015
02:01
மதுரை: மதுரை, ஸ்ரீகாயத்ரி நாராயண் சபாவின் மூலம், 108ல் ஆழ்வார்களின் மனம் என்னும் பொது தலைப்பின் கீழ் 1) திருமெய்யம் திருத்தண்கால் வடபெருங்கோயிலுடையான் என்று 3திவ்ய தேசங்களுக்கும் ஆழ்வார் பாசுர கருத்துக்களுக்கு உள்ளுறைப் பொருளை இக்காலத்து தமிழில் எளிமையாக கவிஞர் கூடல் என். ராகவன் பாடல் எழுதி மெல்லிசையில் வெளியிட்டுள்ளார். இது முதல் வெளியீடு. இதில் திருமெய்யப் பெருமானுக்குரிய பாசுரக்கருத்துகள் மட்டுமல்லாமல் அத்திவ்யதேசத்தின் ஸ்தல, புராண வரலாறுகள் முழுமையாக, அற்புதமான பாடல்களாக கொடுக்கப்பட்டுள்ளது.
திருத்தண்கால் மட்டுமல்லாமல், 7 ஸ்தல வரலாறான வாணாசுர வதமும், உஷை திருமணமும் மெய்சிலிர்க்க வைக்கும், இசையில் தரப்பட்டுள்ளது. வடபெருங்கோயிலுடையான் திவ்ய தேசத்திற்கு ஆண்டாளின் அவதார மகிமை, அப்பெருமானுடனுண்டான காதல் அவனுக்கு செய்த கைங்கரியங்கள், மார்கழி திருப்பாவை நோன்பு, திருவரங்கன் மணக்க கனவுகண்டது, அவனையே அடைந்தது அருமையான பாடலாக தந்துள்ளார்.
2) இரண்டாவது வெளியீடு: நண்ணுறு வாசக மாலை என்னும் ஸ்ரீசுக்தி பீஷ்மர் ஸ்ரீமந் நாராயணன் விஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்ற நாமாவளியில் ஸ்தோத்திரம் செய்தார். அதுபோல் ‘நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணாநரனே‘ என்று கோதை ஆண்டாளின் பாசுர வரிகளின்படியில் அரனின் ஆண்டாள் திருமாலை திருப்பாவையிலும், நாச்சியார் திருமொழியிலும் சொன்ன திரு நாமங்களை (உதாரணத்திற்கு நந்த கோபன் குமாரன், யசோதை இளஞ்சிங்கம், மனத்துக்கினியான்.., அப்படியே எடுத்து நமோ நாராயணாய என்று ஒரு ஸ்ரீ சுக்தியை உருவாக்கியுள்ளார். இதன் பல ஸ்ருதி (பயன்) யாக ஆண்டாள் சொன்ன பயன்களையே வைத்துள்ளார். நண்ணுறு வாசகமாலை என்றே ஆண்டாளும் இதற்கு பெயரிட்டுள்ளாள்.
சீர்காழிக்கு பக்கத்தில் உள்ளது திருநாங்கூர் திவ்யதேசம். திருமங்கையாழ்வார் அவதாரம் செய்த குறையலூர் உள்ள திவ்யதேசம். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 11 திவ்யதேசங்கள் திருநாங்கூர். அங்கே தை அமாவாசைக்கு மறுநாள் நடக்கும் 11 கருட சேவைத் திருவிழா உலக பிரசித்திப் பெற்ற திருவிழா. அவ்விழாவில் அண்ணன் பெருமாள் கோயில் கலியன் ஒலிமாலை என்னும் அமைப்பின் 14வது மாநாட்டில் கவிஞர் கூடல் என். ராகவன், ஆசாரியர் அடிப்பொடி, அவர்களின் மகள் காயத்ரி ரங்கஸ்ரீ மூவருக்கும் ‘வைணவ ரத்னா‘ என்னும் விருது வழங்கப் பெற்றது. அவ்விழாவின் ஒரு அங்கமாக 22.1.2015 அன்று காலை ஏசிடிக்களும் வெளியிடப்பட்டுள்ளது. முதல் பிரதியினை வைணவச் செம்மல் வித்வான். கு. அரங்க நாதாச்சாரியர் ஸ்வாமி, வரிச்சுக்குடி அவர்கள் பெற்றுக் கொண்டனர்.
இந்த ஏசிடிக்கள் வெளியிடுவதற்கு முன்பாக மதுரை கூடலழகர் சன்னிதி வடகரை திருவேங்கடமுடையான், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் எண்ணெய் காப்பு உற்சவத்திலும், ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் வரதராஜன் திருவடிகளிலும் சமர்ப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. விழாவின் முதல் நாள் ( 21.1.2015) மாலை 7மணி அளவில் ஆர். காயத்ரி ரங்கஸ்ரீ பிரபந்த பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடினார்.