பதிவு செய்த நாள்
28
ஜன
2015
11:01
மேட்டுப்பாளையம் : சிறப்பு நலவாழ்வு முகாமில், 48 நாட்கள் ஒன்றாக இருந்த யானைகள், நிறைவு நாளில், மகிழ்ச்சியாக லாரியில் ஏறிச் சென்றன. தமிழக அறநிலையத்துறை சார்பில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே, பவானி ஆற்றின் கரையோரம், யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம், 48 நாட்களுக்கு நடந்தது. இதன் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. இதற்கென முகாமில் பங்கேற்ற 30 யானைகளையும் அலங்காரம் செய்து, விநாயகர் கோவில் முன்பு வரிசையாக நிறுத்தினர். பூஜை செய்த பின், அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ், அனைத்து யானைகளுக்கும் பழங்கள், கரும்பு கொடுத்தார். முதலில் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவில் யானை ஆண்டாள், இரண்டாவது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் யானை ராமலட்சுமி, மூன்றாவது திருச்சி தாயுமான சுவாமி கோவில் யானை லட்சுமி என, வரிசையாக, லாரியில் ஏற்றினர். அறநிலையத்துறை கமிஷனர் தனபால், மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதுமலை முகாம்: நீலகிரி மாவட்டம் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில், யானைகள் நலவாழ்வு முகாம் நடந்தது. இதில், 26 வளர்ப்பு யானைகள் பங்கேற்றன. 48 நாள் முகாமின், நிறைவு விழா நேற்று, தெப்பக்காடு யானைகள் முகாம் வளாகத்தில் நடந்தது. யானைகள் வரிசையாக நிறுத்தப்பட்டு, அங்குள்ள விநாயகர் படத்துக்கு பூஜை செய்யப்பட்டது. பொங்கல் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.விழாவில், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் சந்திரன் தலைமை வகித்தார்.