பதிவு செய்த நாள்
28
ஜன
2015
12:01
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா சரண கோஷத்துடன் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பிப்.,3ல் தேரோட்டம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி சன்னதியில் 6 கலசங்கள் வைத்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் வெளிப்பிரகாரத்தை சுற்றி வலம் வந்து கொடிகட்டி மண்டபத்தை அடைந்தனர். கொடிமரம், மயில்,சேவல், வேல் வரையப்பட்ட கொடிப்படத்திற்கு சிறப்பு பூஜையும், கொடிமரத்திற்கு கலச புனிதநீர் அபிஷேகம் நடந்தது. வாத்தியமேளங்கள், வேதபாராயணம், திருமுறைகள், வேத கோஷங்கள் முழங்க பக்தர்களின் பழநி முருகனுக்கு அரோகரா, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என சரணகோஷத்துடன், காலை 10.45 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. முத்துகுமாரசுவாமி, வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான, திருக்கல்யாணம், பிப்.,2ல் மாலை 7.30 மணிக்குமேல் 8.30மணிக்குள் நடக்கிறது. பிப்.,3ல் தைப்பூச தேரோட்டம் மாலை 4.35 மணிக்கு மேல் தேரடி தேர் நிலையில் இருந்து தேரோட்டம் ஆரம்பம் ஆகி நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. பிப்.,6ல் மாலை 6 மணிக்குமேல் தெப்போற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.