பதிவு செய்த நாள்
29
ஜன
2015
10:01
ராமேஸ்வரம் : புத்துணர்வு முகாம் முடிந்து, அதிக எடையுடன் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு யானை "ராமலெட்சுமி வந்து சேர்ந்தது. கடந்த டிச., 11முதல், மாநில இந்து அறநிலையத்துறை சார்ந்த கோயில்களின் யானைகளுக்கும், தனியார் யானை களுக்கும், கோவை தேக்கம்பட்டியில் 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடந்தது. இதில், ராமேஸ்வரம் திருக்கோயில் யானை "ராமலெட்சுமி பங்கேற்று விட்டு, நேற்று காலை திரும்பி வந்தது. கோயில் குருக்கள், "ராமலெட்சுமிக்கு சிறப்பு பூஜை, மகா தீபாராதனை செய்து வரவேற்றனர். கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர்கள் கக்காரின், ராஜாங்கம், பேஷ்கார்கள் ராதா, அண்ணாதுரை, கமலநாதன், செல்வம் பலர் பங்கேற்றனர். முகாமிற்கு 3250 கிலோ எடையுடன் சென்ற "ராமலெட்சுமி, 48 நாட்களுக்கு பிறகு, 3480 கிலோ எடையுடன் திரும்பி இருப்பது கோயில் ஊழியர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.