பதிவு செய்த நாள்
30
ஜன
2015
11:01
ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவில் திருவிழாவுக்கு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர் என்பதால், சுகாதாரம், பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று, அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டது. ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா, 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிப்., 2ல் மயான பூஜையும், 3ம் தேதி காலை, 7:30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம்; மாலை, 6:30 மணிக்கு மேல் மகா பூஜையும் நடைபெற உள்ளது.பிப்.,4 மாலை, 6:30 மணிக்கு சித்திரத்தேர் வடம் பிடித்தல்; அம்மன் திருவீதி உலா; இரவு, 10:30 மணிக்கு குண்டம் வளர்த்தல் நடக்கிறது. 5ம் தேதி காலை, 8:30 மணிக்கு குண்டம் இறங்குதல்; 6ம் தேதி காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8:00 மணிக்கு மகாமுனி பூஜை, 7ம் தேதி பகல், 11:30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜையும் நடைபெறுகிறது. விழாவையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் குறித்த ஆலோசனைக்கூட்டம், மாசாணியம்மன் கோவில் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கோவில் உதவி ஆணையர் கார்த்திக் தலைமை வகித்தார். வால்பாறை டி.எஸ்.பி., சக்திவேல் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்: குண்டம் திருவிழாவில் பக்தர்கள் அதிகம் வரும் மயான பூஜை, பூ வளர்த்தல், குண்டம் இறங்குதல் போன்ற நாட்களில் கூடுதல் பாதுகாப்பு அவசியம். விழா முடியும் வரை பாதுகாப்பு வசதிகளை பலப்படுத்த கூடுதல் போலீசார் வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மூலம் வீரர்கள் எந்நேரமும் மீட்பு பணிக்கு தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. பிப்., 2 முதல், 7ம் தேதி வரை, எல்லா நாட்களிலும், 24 மணி நேரமும் தொடர்ச்சியாக தடையில்லா மின்சாரம், குடிநீர் வழங்கப்பட வேண்டும். ஆனைமலை மற்றும் ஒடையகுளம் பேரூராட்சி நிர்வாகங்கள் சார்பில், சுகாதார வசதிகள், மொபைல் கழிப்பிட வசதிகள் செய்யப்பட வேண்டும். மயான பூஜை நடைபெற உள்ள பகுதியை சுத்தம் செய்து தர வேண்டும். உரிய இடங்களில், மின்விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சுகாதாரத்துறை சார்பில், மருத்துவ வசதிகளுக்காக முதலுதவி மையம், ஆம்புலன்ஸ், ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனைமலை பகுதிக்குட்பட்ட நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மாசாணியம்மன் கோவில் செல்லும் வழித்தடத்தில் உள்ள கடைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்; அன்னதானம் வழங்குவது கோவில் நிர்வாகம் குறிப்பிடும் இடங்களில் வழங்கலாம்.
பக்தர்கள் கூட்ட நெரிசலை பொறுத்து, பஸ் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட வேண்டும். கோவில் நிர்வாகம் சார்பிலும், பக்தர்கள் வரிசையில் வந்து செல்வதற்கு ஏற்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.சுகாதாரம், போக்குவரத்து துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, பேரூராட்சி, அறநிலையத்துறை, வருவாய், போலீஸ் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.