பதிவு செய்த நாள்
17
ஜூன்
2011
10:06
ஜம்மு:இமயமலையில் அமர்நாத் குகையில் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க 2.20 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.காஷ்மீர் மாநிலத்தில் இமயமலையில், 13 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமர்நாத் குகை உள்ளது. இந்த குகையில், ஒவ்வொரு ஆண்டும் இயற்கையிலேயே உருவாகும் பனிலிங்கத்தை, நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இந்தாண்டு அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு கடந்த மாதம் 10ம் தேதி துவங்கியது. முன்பதிவு மையங்கள் மற்றும் இணையதளம் வழியாக இதுவரை, 2 லட்சத்து 19 ஆயிரத்து 190 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, அமர்நாத் யாத்திரை பதிவுக்கான பொறுப்பு அதிகாரியும், ஜம்மு- காஷ்மீர் வங்கியின் துணைத் தலைவருமான அப்துல் அமீது கூறியதாவது: அமர்நாத் புனித யாத்திரைக்காக 121 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, இணையதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம். இதுவரை நாடு முழுவதிலுமிருந்து 2 லட்சத்து 19 ஆயிரத்து 190 பேர் முன்பதிவு செய்துள்ளனர். பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரையில், பகல்காம் வழியாக பயணம் மேற்கொள்ள, 1 லட்சத்து 10 ஆயிரத்து 172 பேரும், பாதல் வழியாக பயணம் மேற்கொள்ள, 1 லட்சத்து 9,018 பேரும் பதிவு செய்துள்ளனர். இம்மாதம் 29ம் தேதி வரை முன்பதிவு நடக்கும். ஆகஸ்ட் 13ம் தேதி அமர்நாத் யாத்திரை துவங்குகிறது.இவ்வாறு அப்துல் அமீது கூறினார்.