பழநி தண்டாயுதபாணிக்கு சொந்தம் கோவணமும், தண்டமும் தான். அவர் தனக்கென்று எதையுமே வைத்துக் கொள்வதில்லை. தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அத்தனையையும் கொடுத்து விடும் பண்புள்ளவர். நாரதர் கொண்டு வந்த கனி கூட தனக்கு வேண்டாம் என்பதற்காகத்தான். கோபப்படுவது போல் நாடகமாடி, அதையும் தன் அண்ணனுக்கு கிடைக்கச் செய்தார். ஏனெனில், இந்த உலகில் உள்ள எந்தப் பொருளும் நமக்குச் சொந்தமில்லை, நாம் வாழும் இந்த உலகம் ஒரு வாடகை வீடு. இதை எந்த சமயத்திலும் காலி செய்ய தயாராய் இருக்க வேண்டும் என்று நமக்கு சுட்டிக்காட்டுபவர் அவர். அதற்காகத்தான் ஆண்டிக்கோலம். அதனால் ஞானப்பழம் என்று அவரைப் புகழ்கிறோம். இருந்தாலும் நம் பிள்ளை போல் காட்சி தரும் அவனை ஆண்டிக்கோலத்தில் பார்க்க நம் மனம் கேட்கிறதா! எனவே தான் ராஜ அலங்காரம் செய்து திருப்தியடைகிறோம். அவனும் தன்னை உளப்பூர்வமாக வணங்குவோரை ராஜா போல பார்த்துக் கொள்கிறான். அவனை நம்பி தொழில் நடத்துவோர், அவனுக்குரிய பங்கை காணிக்கையாக அளிக்கத் தவறுவதில்லை. இப்படிப்பட்ட பெருமைக்குரிய நம் முத்துக்குமார சுவாமி இன்று காலை 8 மணிக்கு தந்தப் பல்லக்கிலும், இரவு7.30 மணிக்கு வெள்ளிக்காமதேனு வாகனத்திலும் தன் துணைவியருடன் பவனி வருவார். கண்குளிரக் காணக் கிளம்புவோம்.