பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் 23ம் தேதி துவங்குகிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2011 10:06
பேரம்பாக்கம் : நரசிம்ம பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா, 23ம் தேதி துவங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை லட்சுமி நரசிம்ம சுவாமி சேவா சபா டிரஸ்ட் செய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ளது லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில். நரசிம்மரின் ஒன்பது வடிவங்களில் ஒன்றான மாலோவ நரசிம்மன் என்று அழைக்கப்படும் தேவியுடன் கூடிய திருமாலின் வடிவத்தில் இங்கு வீற்றிருக்கிறார். திருமாலின் ஐந்து வகையான பிரதிஷ்டைகளில் ஒன்றான அஸ்தாபன பிரதிஷ்டை அதாவது அமர்ந்த கோலத்தில் சிரித்த முகத்துடன் சாந்த சொரூபமாக ஏழரை அடி உயரத்தில் காட்சியளிக்கிறார். அவர் தாயார் லட்சுமி தேவியை தொடை மீது அமர்த்தி ஒருவருக்கொருவர் அணைத்தபடி கம்பீரமாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இங்கு சிரித்த முகத்துடன் பெருமாள் இருக்க தாயாரின் பார்வை முழுவதும் பக்தர்களை பார்ப்பதாக இருப்பது தனி சிறப்பு. இக்கோயிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா, 23ம் தேதி காலை துவங்க உள்ளது. தினசரி உற்சவர் காலை, மாலையில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 3ம் நாள் கருட சேவை நிகழ்ச்சியும், 7ம் நாள் தேர் திருவிழாவும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை லட்சுமி நரசிம்ம சுவாமி சேவா சபா டிரஸ்ட் மற்றும் கிராம மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.