பதிவு செய்த நாள்
10
பிப்
2015
01:02
காரிமங்கலம்,:காரிமங்கலம் கடைவீதி, வீரபத்ர ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காரிமங்கலம், வீர பத்திர ஸ்வாமி கோவில் பக்தர்களின் முயற்சியால், திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா கடந்த, 7ம் தேதி மாலை, 5.30 மணிக்கு கணபதி பூஜை, கங்கை பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம் ஆகியவற்றுடன் துவங்கியது. 8ம் தேதி காலை, 8 மணி முதல் கோ பூஜை, யாகசாலை பிரவேசம், கலச பிரதிஷ்டை, கணபதி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை, மாலை, 3 மணிமுதல் இரண்டாம் காலயாக பூஜை, சண்டி ஹோமம், நவகிரக ஹோமம், வீரபத்ர ஸ்வாமி, விநாயகர், காளிகாம்பாள், இரவு, 10 மணிக்கு ஸ்வாமி சிலைகள் பிரதிஷ்டை நடந்தது.நேற்று அதிகாலை, 3 மணி முதல், மூன்றாம் காலயாகபூஜை, சாந்தி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. காலை, 6 மணிக்கு மேல், 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடந்தது.
கிரிராஜ சாஸ்திரிகள், சாந்தலிங்க சாஸ்திரிகள், மல்லிகார்ஜூனேஸ் சாஸ்திரிகள், ஈஸ்வர ஐயர் ஆகியோர், கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர்.விழா குழுவினர் மற்றும் காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி வீர சைவ லிங்காயத்து சமூகத்தின் சார்பில் பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.