நாகர்கோவில்: பஞ்சபூதங்களின் வாயு தலமாக கருதப்படும் தென்காளஹஸ்தி சிவன் கோயிலில் சிவராத்திரி விழா வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. மாலையில் மகாபிரதோஷமும், தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது. மறுநாள் 17-ம் தேதி மாலை மூன்று மணிக்கு கணபதிஹோமத்துடன் பூஜை நடக்கிறது. முதல் கால பூஜை மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் 21 வகை அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், 11.30-க்கு 3-ம் கால பூஜையும், நள்ளிரவு 2.30-க்கு 4-ம் கால பூஜையும், அதிகாலை 4.30-க்கு 5-ம் கால பூஜையும் நடக்கிறது. இந்த கோயிலில் ராகு, கேது சனீஸ்வரர் அருள் பாலிப்பதால் இங்கு வரும் பக்தர்களுக்கு நவக்கிரக அர்ச்சனை மற்றும் பரிகாரங்கள் நிறைவேற்றப்படுகிறது.