பதிவு செய்த நாள்
11
பிப்
2015
11:02
கும்பகோணம் : திருவிடைமருதூரில், 100 ஆண்டுகளுக்கு பின் மகாலிங்க ஸ்வாமி கோவிலில், புதிய முருகன் தேர் வெள்ளோட்டம் மார்ச், 5ம் தேதி நடக்கிறது.
திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி கோயிலில் தைப்பூச உற்சவத்தில், 5 தேரோட்டம் நடைபெறும். 80 ஆண்டுகளுக்கு மேலாக தேரோட்டம் தடைப்பட்ட நிலையில் பழைய தேர்களும், தேர் மண்டபங்களும் மிகவும் சிதிலமடைந்தன. கடந்த, 2007ம் ஆண்டு, கோவை ஆனைக்கட்டி ஆர்ஷ வித்யாகுருகுலம் ஸ்தாபகர் தயானந்த சரஸ்வதி சுவாமிகள் மற்றும் திருவாவடுதுறை ஆதீனம் வழிகாட்டலின் பேரில், தேர் திருப்பணி கமிட்டி அமைக்கப்பட்டு, 5 தேர் மண்டபங்கள் முழுமையாக பழமை மாறாமல் திருப்பணி செய்யப்பட்டது. அதிக பொருட்செலவில், 400 டன் எடையில் ஸ்வாமி தேர் செய்யப்பட்டது. காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஏற்பாட்டில் அம்பாள் தேர் அழகுற வடிவமைக்கப்பட்டது.
தற்போது, தொழிலதிபர் பொள்ளாட்சி மகாலிங்கம் குடும்பத்தினரின் நிதி ஆதாரத்தின் அடிப்படையில், கோவில் முருகன் தேர் திருப்பணி நடந்து வருகிறது. ஸ்தபதி காரைக்குடி ராதாகிருஷ்ணன் தலைமையில், தேர் வடிவமைக்கும் பணி நடந்து வருகிறது. இத்தேர் திருப்பணி முடிவடையும் நிலையில், 100 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச், 5ம் தேதி காலை, 7.30 மணிக்கு புதிய தேர் வெள்ளோட்டம் நடக்கிறது.இதில், திருவாவடுதுறை ஆதீனம், 24வது குருமகாசன்னிதானம் அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தயானந்த சரஸ்வதி சுவாமிகள், சக்தி குழுமம் சேர்மன் மாணிக்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், மகாலிங்க சேவா டிரஸ்ட், ஆன்மீக பேரவையினர் செய்துள்ளனர்.
வரும், 2016ம் ஆண்டு மகாமக பெருவிழாவிற்கு முன், தைப்பூசத்திருவிழாவில் விநாயகர், சண்டிகேஸ்வரர் தேர்களும் புதிதாக செய்யப்பட்டு, ஓடும் வகையில் பணிகள் நடந்து வருவதாக, தேர் திருப்பணி கமிட்டியினர் தெரிவித்தனர்.