பதிவு செய்த நாள்
11
பிப்
2015
11:02
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே, கால்நடை மருத்துவமனை கட்ட பள்ளம் தோண்டிய போது, ஐம்பொன் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. திருவாரூர் மாவட்டம், மணலி பரப்பாகரம் பெருமாள் களத்தில், நபார்டு வங்கி மூலம் நிதி ஒதுக்கப்பட்டு, கால்நடை மருத்துவமனை கட்டும் பணி நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் மாலை, கட்டடம் அருகே செப்டிக் டேங்க் மற்றும் கழிப்பறை கட்ட, ஜே.சி.பி., மூலம் பள்ளம் தோண்டினர். அப்போது, மண்ணுக்குள் சுவாமி சிலைகள் புதைந்திருப்பது தெரிந்தது. 2 அடி உயர பெருமாள் சிலை, 1 அடி உயரத்தில் இரு அம்மன் சிலைகள் என, மூன்று ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. திருத்துறைப்பூண்டி தாசில்தார், சிலைகளை கைப்பற்றி, அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றார். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியில் பெருமாள் கோவில் இருந்தது விசாரணையில் தெரிந்தது.