பதிவு செய்த நாள்
11
பிப்
2015
12:02
வாழப்பாடி : வாழப்பாடியில், 10 ஆண்டுகளாக நீடித்து வந்த, அக்ரஹாரம் சென்றாயப்பெருமாள்
கோவில் பிரச்னைக்கு, பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு காணப்பட்டதால், கும்பாபிஷேக விழா நடத்த கோவில் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாழப்பாடி அக்ரஹாரத்தில், 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சென்றாயப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கோவிலை, மூன்று குடும்பத்தை சேர்ந்த பங்காளிகள் நிர்வகித்து வந்தனர். பாழடைந்து கிடந்த அக்கோவில், பல லட்சம் ரூபாய் செலவில் ராஜகோபுரத்துடன் புதுப்பிக்கப்பட்டது. கோவிலை நிர்வகிப்பதில், இரு தரப்பினருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதால், கும்பாபிஷேகம் நடத்துவது தடைபட்டது. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் கோவில் மூடிக்கிடந்தது. விசேஷ தினங்களில் கூட, ஸ்வாமியை தரிசிக்க வழியின்றி பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இந்நிலையில், ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில், இரு தரப்பினரிடையே மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பேச்சுவார்த்தையில், கும்பாபிஷேகத்தை, மூன்று குடும்ப பங்காளிகளும் இணைந்து நடத்துவது. தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு குடும்பத்தினர் கோவிலை நிர்வகித்து தேர்த்திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், கும்பாபிஷேகம் நடத்திட கோவில் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக தருவிக்கப்பட்டிருந்த ஸ்வாமி சிலைகளை தண்ணீரில் மூழ்கடித்து, உயிரேற்ற சிறப்பு பூஜை வழிபாடு நடத்தப்பட்டது. அந்த பூஜையில் மூன்று குடும்ப பங்காளிகள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.பேச்சுவார்த்தை மூலம், 10 ஆண்டு பிரச்னைக்கு சுமூக தீர்வு காணப்பட்டதால், பக்தர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கும்பாபிஷேக விழா மற்றும் தேர்த்திருவிழா நடத்துவதற்கு பொதுமக்களும், பக்தர்களும் ஆதரவளிக்க வேண்டும் என, சென்றாய பெருமாள் கோவில் நிர்வாகிகள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.