பதிவு செய்த நாள்
11
பிப்
2015
12:02
காரைக்குடி:"தர்மத்தின்படி வாழ்ந்தால் உலகம் ஏற்று கொள்ளும், என திருச்சி கல்யாணராமன்
பேசினார்.காரைக்குடி செக்காலை நகர சிவன்கோயிலில் "கஜேந்திர மோட்சம் என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: ஒரு யானை நீண்ட நாட்களாக விஷ்ணுவை துதித்து வந்தது. அங்குள்ள குளத்தில் இருந்த முதலை, ""தன்னால் யானையை போல் பக்தி செலுத்த முடியவில்லையே என்று ஏங்கியது.
ஒருநாள் யானை, தண்ணீரில் இறங்கிய போது, முதலை அதன் காலை பிடித்து இழுத்தது. நீண்ட நேரம் போராடியும் அதனால் விடுவிக்க முடியவில்லை. இதனால், "ஆதி மூலமே என்று அழைத்தது.
பகவான் நாராயணன் அவருடைய சக்கரத்தை செலுத்தி, முதலையை கொன்று யானையை
காப்பாற்றினார்.புகழேந்தி புலவர் இதனை முதலைக்கு மோட்சம் என்கிறார். முதலை யானையின் காலை பிடித்ததால், முதலில் மோட்சத்துக்கு சென்றது. கடவுளை காண வேண்டும். பரம பதத்தை அடைய வேண்டும் என்றால், கடவுளின் அடியார்களை பிடித்து கொள்ள வேண்டும்.இறைவனுக்கு தொண்டு செய்பவர்கள் உயர்ந்தவர்கள் என்ற தத்துவத்தை, முதலை உலகிற்கு எடுத்து காட்டியது.
இதை கம்பர் ராமாயணத்தில் ஒவ்வொரு காண்டத்திலும் ஒவ்வொரு விதமாக கையாள்கிறார்.
மனிதனோ, விலங்கோ தர்மத்தின் படி நடந்து கொண்டால் உலகம் ஏற்று கொள்ளும். நல்லபடியாக நடந்து கொள்ளாத மனிதன் விலங்கு தான், என்றார்.