சபரிமலை: மகரவிளக்கு கால பூஜைகள் முடிந்த பின்னர் மாத பூஜைக்காக சபரிமலை இன்று மாலை 5.30 மணிக்கு திறக்கிறது. 17ம் தேதி வரை நடை திறந்திருக்கும். மகரவிளக்கு கால பூஜைகள் முடிந்து சபரிமலை ஜன.,20ம் தேதி காலை அடைக்கப்பட்டது. தொடர்ந்து பந்தளம் மன்னர் பிரதிநிதி திருவாபரணங்களுடன் பந்தளம் திரும்பினார். அதன் பின்னர் முதன் முறையாக மாசி மாத பூஜைக்காக சபரிமலை இன்று மாலை 5.30-க்கு திறக்கிறது. தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். இன்று வேறு எந்த விசேஷ பூஜைகளும் கிடையாது. இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை முதல் 17 வரை தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறக்கும். எல்லா நாட்களிலும் காலை 5.15 மணி முதல் பகல் 12 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். எல்லா நாட்களிலும் இரவு 7 மணிக்கு படிபூஜை நடைபெறும். இந்த நாட்களில் உதயாஸ்மனபூஜை, சகரஸ்ரகலச பூஜை, களபபூஜை போன்ற பூஜைகளும் நடைபெறும். 17-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.