பதிவு செய்த நாள்
12
பிப்
2015
11:02
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் புனரமைப்பு பணிகளில், கருங்கல் சுவர்களையும், சிலைகளையும் சுத்தம் செய்ய, தடை விதிக்கப்பட்ட, சாண்டு பிளாஸ்டிங் எனப்படும் மணல் வீச்சு முறை பயன்படுத்தப்படுவதாக, புகார் எழுந்துள்ளது. சென்னை, திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோவிலில், கடந்த சில ஆண்டுகளாக, பல கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. அந்த பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், வரும், 22ம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை, அறநிலைய துறை அதிகாரிகள், சுறுசுறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.
இரவில் மணல் வீச்சு: திருப்பணி மற்றும் கும்பாபிஷேக ஏற்பாட்டில், பல்வேறு நிலைகளில், ஆகம விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக, பக்தர்களும், ஆகம அறிஞர்களும், ஆலய வழிபடுவோர் சங்கத்தினரும் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, திருப்பணிகளை ஆய்வு செய்த, அறநிலைய துறை ஆணையர் உள்ளிட்ட உயரதிகாரிகள், பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, கோவிலில் சன்னிதி சுவர்களும், தூண்களில் உள்ள சிற்பங்களும், அறநிலைய துறையால், தடை செய்யப்பட்ட மணல் வீச்சு முறையில், சுத்தம் செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
அனுமதிக்கப்படாதது ஏன்?: இதுகுறித்து பக்தர்கள் சிலர் கூறியதாவது: தொல்லியல் துறை தடையையும், அறநிலைய துறை ஆணையர் அறிவுறுத்தலையும் மீறி, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, மணல் வீச்சு முறையில், பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.
வேதனை: இதுகுறித்து, தகவல் அறிந்து, அங்கு சென்றோர், உள்ளே அனுமதிக்கப்படவில்லை. காலையில் சென்று பார்த்தபோது, வடிவுடையம்மன் சன்னதியை சுற்றியுள்ள பகுதிகளில் சுவர்களும், சிற்பங்களும் மிகுந்த பளபளப்புடன் காணப்பட்டன. அங்கு, மணல் வீச்சு செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள் கிடந்தன. இதை அறநிலைய துறையே வேடிக்கை பார்ப்பது தான் வேதனை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மணல் வீச்சு ஏன் கூடாது?: * பாரம்பரிய சிறப்பு மிக்க சிற்பங்கள், கல்வெட்டுகளை சுத்தப்படுத்த, மணல் வீச்சு முறை, முன்பு பயன்படுத்தப்பட்டது.
* உயர் அழுத்தத்தில் மணல் துகள்கள், சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் மீது மோதுவதால், அவற்றில் உள்ள நுணுக்கமான தகவல்கள் மற்றும் உருவம் சேதமடைவதுடன், விரிசல்களும் ஏற்படும்.
* அதனால், தொல்லியல் துறை, மணல் வீச்சு முறையை தடை செய்துள்ளது.
* கோவில்களில், மணல் வீச்சு முறையில், தூண்கள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்யக்கூடாது என, 2002ம் ஆண்டில் அப்போதைய, அறநிலைய துறை ஆணையர் உத்தரவிட்டார். அதற்கு பதிலாக, தண்ணீரை மட்டுமே பீய்ச்சி அடித்து சுத்தப்படுத்த வேண்டும் என, அறிவுறுத்தப் பட்டுள்ளது.
- நமது நிருபர் -