பதிவு செய்த நாள்
12
பிப்
2015
11:02
ராமேஸ்வரம் : கச்சதீவு விழாவுக்கு செல்லும் படகிற்கு டீசல், பக்தர்களுக்கு உணவு, குடிநீருக்கு கட்டணம் வசூலிப்பதாக படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர். கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழா, பிப்., 28 மற்றும் மார்ச் 1 ல் நடக்கிறது. இதில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து செல்லும் பக்தர்களிடம் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.1300 வசூலிக்கப்படுகிறது. இதனால், ஏழை பக்தர்கள் பங்கேற்க முடியாத நிலை உள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து ராமேஸ்வரம் விசைப்படகு உரிமையாளர்கள் சேசு, எமிரேட், சகாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கச்சத்தீவுக்கு செல்லும் படகு இயற்கை சீற்றத்தால் சேதமடைகிறது. மறுநாள் மீன்பிடிக்க செல்ல முடியாமல், உரிமையாளர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது படகிற்கு டீசல் செலவுக்கும், படகோட்டிகளுக்கு சம்பளத்திற்கும் ரூ.1000 வசூலிக்கிறோம். மீதமுள்ள 300 ரூபாயில், ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு அரை லிட்டர் குடிநீர் பாட்டில், திரும்பும் போது ஒரு சாப்பாடு பொட்டலம் வழங்கப்படுகிறது. இவ்விழாவிற்கு வியாபார நோக்கில் செல்வதில்லை. பாரம்பரிய உரிமையை நிலை நாட்டவே செல்கிறோம். இதை சிலர் தவறாக சித்தரித்து, நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் இடையே பிரச்னை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பது கண்டனத்திற்குரியது. இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.