பதிவு செய்த நாள்
12
பிப்
2015
11:02
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு கூடுதல் புரோகிதர் நியமனம் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். தொன்மையான இக்கோயிலில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இவை தவிர தட்சிணாமூர்த்தி, துர்க்கையம்மன், வினாயகர், முருகன், நவக்கிரகம் ஆகியவற்றிற்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. அனைத்து சன்னதிகளிலும் பூஜை செய்வதற்கு புரோகிதர் ஒருவர் மட்டுமே உள்ளார். வியாழன், வெள்ளி, சனி, ஆகிய நாட்களில் குறிப்பிட்ட தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்ய பக்தர்கள் பலரும் வந்து செல்வர். தட்சிணாமூர்த்தி, சனிபகவான், துர்க்கையம்மன் சன்னதிகளில் அர்சனை செய்யச்செல்லும் புரோகிதர் முக்கிய சுவாமி, அம்மன் சன்னதிகளுக்கு பக்தர்கள் செல்ல முடியாதவாறு கேட் போட்டு பூட்டி விடுகிறார். இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டியதுள்ளது. நீண்ட நேரம் காத்திருக்க முடியாத பக்தர்கள் பலர் தாங்கள் விரும்பியபடி சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பி செல்கின்றனர். சங்கடஹர சதுர்த்தி, பவுர்ணமி, அமாவாசை, கார்த்திகை மற்றும் பிரதோஷ நாட்களில் அதிகப்படியான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பல நேரங்களில் கூட்டத்தால் அவதிப்படும் நிலை உள்ளது. இதனால் கூடுதல் புரோகிதரை நியமிக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.