பதிவு செய்த நாள்
13
பிப்
2015
02:02
விருத்தாசலம் : விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ஆழத்து விநாயகருக்கு 10 நாள் உற்சவம், கொடியேற்றத்துடன் துவங்கியது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவ விழா வரும் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதில், 6ம் நாள் உற்சவமாக விருத்தகிரீஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் விபச்சித்து முனிவருக்கு காட்சியளித்தல், மார்ச் 3ம் தேதி தேரோட்டம், 4ம் தேதி மாசி மகம், 5ம் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ஆழத்து விநாயகருக்கு 10 நாள் உற்சவம், இன்று (13ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கி, வரும் 21ம் தேதி தேரோட்டம், 22ம் தேதி தீர்த்தவாரியுடன் முடிகிறது. இதையொட்டி, நேற்று இரவு 7:30 மணிக்கு ஆழத்து விநாயகர் சன்னதியில் சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து, இன்று காலை 6:30 மணிக்கு விருத்தகிரீஸ்வரர், தாயார், ஆழத்து விநாயகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, ஆழத்து விநாயகர் சன்னதியில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன் சுவாமிகள் பல்லக்கில் எழுந்தருளினர். பகல் 12:00க்கு மேல் 1:30 மணிக்குள் கொடி மரத்திற்கு புனிதநீர், பால், சந்தனம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கொடியேற்றம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு யானை வாகனத்தில் ஆழத்து விநாயகர் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.