பதிவு செய்த நாள்
14
பிப்
2015
11:02
வேலூர்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மகா ரதத்தை, ஆண்டு முழுவதும் தரிசிக்கும் வகையில், பைபர் கண்ணாடி கவசம் பொருத்தப்படுகிறது.
அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில், தேரோட்டம் நடத்துவது பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. இதில், விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர், மகா ரதம் (பெரிய தேர்), அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகிய பஞ்ச ரதங்கள், பவனி வருவது நடைமுறையில் உள்ளது. தேர் பவனி முடிந்ததும், தேரடி வீதியில் நிலை நிறுத்தப்படும் பஞ்ச ரதங்கள், இரும்பு தகடுகளால் மூடிவைத்து பாதுகாக்கப்படுகிறது.
இதனால், தீப திருவிழாவை தவிர்த்து, மற்ற நாட்களில் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், தேர்களை தரிசிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, மதுரை மீனாட்சியம்மன் கோவில் தேருக்கு, பைபர் கண்ணாடி கவசம் பொருத்தியிருப்பது போல், அண்ணா மலையார் கோவில் ரதங்களுக்கும் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதலில், 10.5 லட்சம் ரூபாய் செலவில், மகா ரதத்துக்கு, பைபர் கண்ணாடி பொருத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணி, அடுத்த வாரத்துக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது; இதைத்தொடர்ந்து, மற்ற ரதங்களுக்கும், பைபர் கண்ணாடி கவசம் பொருத்தும் பணி துவங்கும். இதன்மூலம், மழை, வெயில் போன்றவற்றால், ரதங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது; மேலும், ஆண்டு முழுவதும் ரதங்களை பக்தர்கள் தரிசிக்கலாம்.