விருத்தாசலம்: மணிமுக்தாற்றங்கரை செல்லியம்மன் கோவிலில் 108 சுமங்கலி பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர். விருத்தாசலம் மணிமுக்தாற்றங்கரை செல்லியம்மன் (எ) வடபத்திர காளியம்மன் கோவில் செடல் உற்சவம், கடந்த 3ம் தேதி காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 10ம் தேதி காலை 9:00 மணிக்கு மணிமுக்தாற்றிலிருந்து பக்தர்கள் சக்தி கரகம், 501 பால்குடம் ஏந்தி, செடல் அணிந்து, கிரேன்களில் விமான அலகு அணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, 11ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. நிறைவாக திருவிளக்கு பூஜையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்ப அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் சுமங்கலி பெண்கள் 108 திரு விளக்கேற்றி, சுவாமியை வழிபட்டனர்.