பதிவு செய்த நாள்
16
பிப்
2015
11:02
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், யோகிராம் சுரத்குமார் ஆஸ்ரமத்தில், 14ம் ஆண்டு ஆராதனை விழா நடந்தது. திருவண்ணாமலையில் வாழ்ந்த, மகான்களில் ஒருவர் யோகிராம் சுரத்குமார். இவர் வாழ்ந்த ஆஸ்ரமத்தில், தினமும் பஜனைகள், நமாவளி பாடல்கள் பாடி, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், யோகிராம் சுரத்குமார் ஆஸ்ரமத்தில், இரு தினங்களாக யோகிராம் சுரத்குமாரின் ஆராதனை விழா நடந்தது. நேற்று முன்தினம் ஆஸ்ரமத்தில் உள்ள அதிஷ்டானத்தில், சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை மகன்யாசம் மற்றும் அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகள், செந்தில் கனபாடிகள் தலைமையில் நடந்தது. பூஜ்ய நித்யானந்தகிரி சுவாமிஜி முன்னிலையில், தீர்த்த நாராயண பூஜை, பக்தர்கள் பஜனை, சற்குரு நாத ஓதுவார் குழுவினர் தேவார பாடல், விஜயகிருஷ்ண பாகவதரின் குரு பஜனைகள் நடந்தது. இரவு, பகவானின் உற்சவ மூர்த்தியுடன் வெள்ளி ரத வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.