பதிவு செய்த நாள்
16
பிப்
2015
11:02
கோவை : மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, சிவ பக்தர்கள் பலர் பாதயாத்திரையாக கோவைக்கு வரத்துவங்கியுள்ளனர். கோவை, அருகே வெள்ளியங்கிரி மலையில், சுயம்பு வடிவமாக சிவபெருமான் வீற்றிருக்கிறார். வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க, பனி, குளிர் பாராமல், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலில் மகா சிவராத்திரி விழாவும், சித்ரா பவுர்ணமியும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.வரும்,17ம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கோவை மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிவ பக்தர்கள் பாதயாத்திரையாக வரத்துவங்கியுள்ளனர். பெங்களூருவை சேர்ந்த சிவபக்தர் பேரவையினர், நீண்டதுாரம் பாதயாத்திரையாக கோவைக்கு வந்துள்ளனர். அவர்கள், ஜன., 15ல், பெங்களூருவில் இருந்து யாத்திரை கிளம்பியுள்ளனர். தொடர்ந்து, பல்வேறு கரடு, முரடான பாதைகளை கடந்து, நேற்று முன்தினம் கோவை வந்தடைந்தனர்.
பெங்களூருவில் இருந்து வெள்ளியங்கிரிக்கு வந்த, சிவபக்தர் கிருஷ்ணா கூறுகையில், நாங்கள் வழக்கமாக, காசிக்கு பாதையாத்திரையாக செல்வது வழக்கம். கடந்த ஆண்டு வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரையாக வந்தோம். அப்போது, கோவில் பற்றி, அரிய பல விஷயங்களும், ஆன்மிக முக்கியத்துவமும் தெரியவந்தது. அதனால், இந்த ஆண்டும் வெள்ளியங்கிரிக்கு பாதயாத்திரையாக வந்துள்ளோம். இறைபக்தியின் உணர்வை வார்த்தைகளால் வருணிக்க முடியாது; உணர மட்டுமே முடியும், என்றார்.