பதிவு செய்த நாள்
16
பிப்
2015
11:02
கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கத்தில் உள்ள, ஊரணீசுவரர் கோவிலின் புதிய தேர் வெள்ளோட்டம், நேற்று நடந்தது. கூடுவாஞ்சேரி அடுத்த, ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில், அருள்மிகு பூரணாம்பிகை உடனுறை ஊரணீசுவரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, கடந்த சில மாதங்களுக்கு முன், புதிய தேர் செய்யும் பணி துவங்கி, கடந்த சில தினங்களுக்கு முன் முடிந்தது.அதைத் தொடர்ந்து, புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. அதிகாலை, 4:00 மணி முதல் 8:30 மணி வரை, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், அம்மையப்பருக்கு சிறப்பு வேள்வி பூஜையும் நடந்தன. காலை, 11:00 மணிக்கு, புதிய தேரில், அருள்மிகு பூரணாம்பிகையுடன் ஊரணீசுவரர் சுவாமி எழுந்தருளினார். பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனர். அதைத் தொடர்ந்து, கைலாய வாத்தியங்கள் முழங்க, தேர் வெள்ளோட்டம் துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். தேர், கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவில் அருகே நிலைக்கு வந்தது. ஏராளமான பக்தர்கள், சிவனடியார்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்கள். விழா ஏற்பாடுகளை பகுதிவாசிகள் செய்திருந்தனர்.