சிதம்பரம்:மகா சிவராத்திரியையொட்டி சிதம்பரத்தில், நாளை நாட்டியாஞ்சலி நடக்கிறது. சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் கடந்த 1981 முதல் நடராஜர் கோவில் கிழக்கு கோபுர வாயில் அருகே நாட்டிய நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதில் பிரபல நடன கலைஞர்கள் பங்கேற்று நாட்டியமாடி வருகின்றனர்.இந்த அமைப்பின் நாட்டியாஞ்சலிக்கு நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் நிர்வாகம் இந்த ஆண்டு எதிர்ப்பு தெரிவித்து, தில்லை நாட்டியாஞ்சலி டிரஸ்ட் என்ற அமைப்பை உருவாக்கி கோவில் வளாகத்தில் நாட்டியாஞ்சலி நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இதையடுத்து நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா சிதம்பரம் தெற்கு வீதி ராஜா சர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் நடத்தப்படுகிறது.இரு அமைப்புகளும் நடத்தும் நாட்டியாஞ்சலி மகா சிவராத்திரி அன்று மாலை துவங்குகிறது.சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நடக்கும் விழா மாலை, 6:௦௦ மணிக்கு மங்கள இசையுடன் துவங்குகிறது. முதல் நிகழ்ச்சியாக பெங்களூரு நடராஜ ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்களின் பரத நாட்டியம், புதுடில்லி ரெட்டி லட்சுமி பரதம், ரஞ்சனி நாயர் குச்சுப்புடி நாட்டியம் ஆகியவை நடக்கின்றன. தொடர்ந்து துவக்க விழா நடக்கிறது. நள்ளிரவு வரை நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
பொது தீட்சிதர்கள் நடத்தும் போட்டி நாட்டியாஞ்சலி விழா கிழக்கு கோபுரம் வாயில் அருகில் மாலை, 4 மணிக்கு மங்கள இசையுடன் துவங்குகிறது. முதல் நிகழ்ச்சியாக சிதம்பரம் சிவசக்தி இசை நடனப்பள்ளி மாணவர்களின் பரத நாட்டியம் நடக்கிறது. தொடர்ந்து சென்னை வாமதேவ கலைக்கூடம் மாணவர்கள் பெங்களூரு முத்ரிகா பவுண்டேசன் மாணவர்கள், சிதம்பரம் நாட்டியப் பள்ளி மாணவிகள் என அதிகாலை 5 மணி வரை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.