ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், சில்லரை நாணயம் வழங்கும் மெஷின் பழுதால் பக்தர்கள் அவதியடைந்துள்ளனர். ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் உண்டியல்களில் காசு போடுவதற்கு சில்லரை நாணயம் கிடைக்காமல் திண்டாடினர். பக்தர்களின் சிரமத்தை உணர்ந்து ஸ்டேட் வங்கி சார்பில் ரூபாய் தாள்கள் கொடுத்தால், ஒரு ரூபாய் சில்லரையாக நாணயம் வழங்கும், தானியங்கி மெஷினை கோயில் கிழக்கு வாசலில் வைக்கப்பட்டது. துவக்கத்தில் பக்தர்கள் பயன்பாட்டில் இருந்த மெஷின் காலப்போக்கில் பாரமரிப்பின்றி பழுதடைந்தது, தற்போது கேட்பாரற்று கிடக்கிறது. எந்த நோக்கத்திற்காக இந்த சில்லரை நாணயம் வழங்கும் மெஷின் வைக்கப்பட்டதோ, அது நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.