பதிவு செய்த நாள்
17
பிப்
2015
11:02
நாகர்கோவில் : சிவராத்திரியை ஒட்டி குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நேற்று தொடங்கியது. 110 கிலோ மீட்டர் தூரம் ஓடி 12 சிவாலயங்களை வழிபடும் இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொண்டாடப்படும் சிவராத்திரி விழா குமரி மாவட்டத்தில் சற்று வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது. கல்குளம், விளவங்கோடு தாலுகாவில் 110 கிலோ இடைவெளியில் அமைந்துள்ள 12 சிவாலயங்களை விரதமிருந்து சிவராத்திரி நாளில் பக்தர்கள் ஓடி சென்று வழிபடுகின்றனர். இதற்கு இரண்டு விதமான வரலாறு கூறுகிறது. பீமன் அகம்பாவத்தை அடக்கவும், திருமாலின் பெயர் கேட்டாலே கடும் கோபம் கொள்ளும் சிவபக்த குணம் கொண்ட புருஷாமிருகத்துக்கு, சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என்று உணர்த்துவதற்காகவும் கிருஷ்ணன் நடத்திய நிகழ்ச்சிதான் இந்த ஓட்டம் ஓன்பது ஒரு வரலாறு. கடும் தவம் இருந்து , தான் எதை தொட்டாலும் சாம்பல் ஆகிவிட வேண்டும் என்று சிவனிடம் வரம் பெற்ற சூண்டோதரன் என்ற அரக்கன், சிவனை தொட முயன்ற போது சிவன் ஓடி ஒளிந்ததன் நினைவாக நடைபெறும் ஓட்டம் என்பது மற்றொரு வரலாறு.
இன்று நடைபெறும் சிவராத்திரி விழாவுக்காக திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து நேற்று மதியம் ஓட்டம் தொடங்கியது. காவி உடை உடுத்து, கையில் விசறி, இடுப்பில் திருநீற்று பையுடன் பக்தர்கள் கோபாலா, கோவிந்தா என்று அழைத்தவாறு ஓடி சென்றனர். அங்கிருந்து திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனைக்கு நள்ளிரவில் வந்து சேர்ந்தனர். இன்று அதிகாலையில் பன்றிபாகத்திலிருந்து பயணம் தொடங்கும் இவர்கள் கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றியோடு கோயில்களில் வழிபட்டு விட்டு இரவில் திருநட்டாலம் சிவன் மற்றும் விஷ்ணு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சங்கர நாராயணர் கோயிலில் ஓட்டத்தை நிறைவு செய்கின்றனர். ஓட்டமாக மட்டுமல்லாமல், வாகனங்களிலும் திரளாக பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்கள் இன்று அதிகாலை இந்த பயணத்தை தொடங்குவர். சிவராத்திரிக்காக குமரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.