பதிவு செய்த நாள்
17
பிப்
2015
11:02
புதுச்சேரி: அரியாங்குப்பம், சிவசைலநாதர் கோவிலில், ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள, 7 டன் எடையுள்ள, மகா நந்தி சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. அரியாங்குப்பம் அடுத்த மணவெளி, சிவலிங்கபுரத்தில், திரிபுரசுந்தரி சமேத சிவசைலநாதர் கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.திருப்பணியின் ஒரு பகுதியாக, கோவிலில் புதிதாக மகா நந்தி சிலை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது.அதற்காக, மகாபலிபுரத்தில், ஒரே கல்லில் மகா நந்தி சிலை செதுக்கப்பட்டது. 6 அடி உயரம், 8 அடி நீளம், 3.5 அடி அகலம் கொண்ட, 7 டன் எடையுள்ள மகா நந்தி சிலை கோவில் வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது. சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதிற்காக, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, முதற்கால யாக பூஜையும், நேற்று காலை 9:00 மணிக்கு 2ம் கால யாக பூஜைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, மகா நந்தி சிலை ராட்சத கிரேன் மூலமாக நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுபோல், 30 அடி உயரத்திலான கொடி மரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. விழாவில், அறங்காவலர் குழு தலைவர் இமையவன், துணைத் தலைவர்கள் கலைவாணன், சாமி லோகநாதன், தொழிலதிபர் ராதாகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.