விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜோதி தலைமையில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், ஆய்வாளர் சுபத்ரா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மேலாளர் துவாரகநாத் ஆகியோர் முன்னிலையில், மகளிர் சுய உதவிக் குழுவினர், கோவில் பணியாளர்கள் என 100 பேர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 11 லட்சத்து 95 ஆயிரத்து 250 ரொக்கம், 90 கிராம் தங்கம், 130 கிராம் வெள்ளி நகைகள் இருந்தன. கடந்த அக்டோபர் 15ம் தேதி உண்டியல் காணிக்கை 11 லட்சத்து 83 ஆயிரத்து 975 ரூபாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.