பதிவு செய்த நாள்
24
பிப்
2015
12:02
திருக்கழுக்குன்றம்: வழுவதுார் அக்னிபுரீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும், புனரமைக்கும் பணிக்கு மின் கம்பிகள் இடையூறாக அமைந்து உள்ளன. திருக்கழுக்குன்றம் அருகே வழுவதுார் கிராமத்தில், பல்லவ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த அக்னிபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு பல்லவர்களை தொடர்ந்து சோழர், விஜயநகர மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் தானங்கள் வழங்கி திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
கலைநயம்: இக்கோவில் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டு கருவறையின்மேல் அழகிய கலைநுட்பத்துடன் கூடிய விமானத்தில் பல்வேறு சுதை சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டன. கருவறையின் வெளியே அர்த்த மண்டபத்தில் உள்ள துாண்களில் அழகிய சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. எதிரே நந்தி மண்டபமும், இடது புறத்தில் அம்மன் சன்னிதியும் கோவிலையொட்டி, திருக்குளமும் அமைந்துள்ளன. சுற்று வட்டார பக்தர்கள் மட்டு மின்றி, மாநிலத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் வழிபட்டு வந்தனர். இத்தகு சிறப்புமிக்க இக்கோவில், கடந்த 40 ஆண்டுகளாக பராமரிப்பின்றி, கோவிலின் மீது மரக்கன்றுகள் வளர்ந்து, விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்தது. இதை பராமரிக்க வேண்டிய இந்து சமய அறநிலையத் துறையினர், வருவாய் உள்ள கோவில்களில் மட்டுமே கவனம் செலுத்தியதால், இதுபோன்ற கிராமக் கோவில்கள் பராமரிப்பு மற்றும் பூஜைகள் இன்றி சிதிலமடைந்தன. இந்நிலையில், கடந்த ஆண்டு பகுதிவாசிகள் ஒருங்கிணைந்து கோவிலை புனரமைக்க முடிவு செய்தனர். இதற்காக நன்கொடையாளர்கள் மூலம் நிதியினை திரட்டி, பல லட்சம் மதிப்பில் கோவிலை முழுமையாக பிரித்து கட்டமைப்பு மாறாமல், முன் இருந்ததைப் ÷பான்று சிறப்பாக செய்து வருகின்றனர்.
அச்சுறுத்தல்: பல நுாறு ஆண்டுகள் பழமையான கோவிலின் மேல், சில ஆண்டுகளுக்கு முன் மின்வாரிய அதிகாரிகள் உயர் அழுத்த மின் கம்பி களை கொண்டு சென்றனர். இதனால் தற்போது புனரமைப்பு பணியை மேற்கொள்ளும்போது இடையூறாகவும், எதிர்காலத்தில் பக்தர்களின் பாதுகா ப்பிற்கு அச்சுறுத்தலாகவும், ஆகம விதிகளுக்கு முரணாகவும் உள்ளன. இதை மாற்றியமைக்க, மின் வாரிய அதிகாரிகள் கட்டணம் செலுத்தும்படி வற்புறுத்துகின்றனர். பக்தர்கள் நிதியில் புனரமைப்பு செய்து வரும் நிலையில், இது கூடுதல் செலவினத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே கம்பிகளை மாற்றுப்பாதையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.