பதிவு செய்த நாள்
26
பிப்
2015
12:02
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவிலில், மார்ச் 4ம் தேதி குண்டம் திருவிழா நடக்கிறது. கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோவில் குண்டம் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் நடைபெறும். இந்த ஆண்டு கடந்த, 17ம் தேதி கொடிக் கம்பம் நடப்பட்டு, 15 நாள் நோன்பு சாட்டப்பட்டது. பக்தர்கள் தினமும், கொடிக்கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். மார்ச், 2ம் தேதி இரவு 7:00 மணிக்கு, மாமாங்கம் ஆற்றில் சக்தி விந்தையை ஆற்றில் இருந்து அழைத்து வரும் நிகழ்ச்சியும், 3ம் தேதி காலை, 7:00 மணிக்கு மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக பிளேக் மாரியம்மன் கோவிலுக்கு வந்து, மாவிளக்கு வைத்து வழிபாடும் நடக்கிறது. பின், காலை, 10:00 மணியளவில் 60 அடி நீளமும், மூன்று அடி அகலமும், ஒன்றேகால் அடி ஆழமுள்ள குண்டம் திறப்பு விழா நடக்கிறது. பின், இரவு, 7:00 மணிக்கு குண்டத்திற்கு பூப்போடும் நிகழ்ச்சியை தொடர்ந்து, அம்மன் சிம்மவாகனத்தில் எழுந்தருள மாமாங்கம் ஆற்றில் இருந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி இடம்பெறுகிறது. மார்ச் 4ம் தேதி காலை, 6:00 மணிக்கு, மாமாங்கம் ஆற்றில் சக்தி விந்தையை அழைத்து வருதலும், பின், பிளேக் மாரியம்மன் கோவில் முன்பு உள்ள குண்டத்தில் காலை, 7:00 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.