பதிவு செய்த நாள்
26
பிப்
2015
12:02
ஆலங்குடி: திருவரங்குளத்தில், காமன் பண்டிகையையொட்டி, காமன் மரம் ஊன்றி, திருவிழா துவங்கியது.திருவரங்குளத்தில், விவசாயிகள் மழை வளம் வேண்டியும், திருவிழா பண்டிகை துவங்கமாக முதல் திருவிழாவாக காமன் பண்டிகையை முன்னிட்டு, நைனாரி குளக்கரையில், ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி கோழி அடித்து ரசம் வைத்து, அன்னதானம் வழங்கி மேளதாளத்துடன் காமன் மரத்தை ஊர்வலமாக எடுத்து வந்து, தெற்கு ரதவீதியில் உள்ள அம்மன் சன்னதி அருகில் காமன் மரம் ஊன்றப்பட்டு, அதற்கு அபிஷேக ஆராதனையும் சிறப்பு வழிபாடும் நடந்தது. தினமும் அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகின்றது. 16வது நாள் காமன் பண்டிகை நிறைவு நாளையொட்டி, இளைஞர்கள் ரதி மன்மதன் வேடமணிந்து, சிறப்பு ஆராதனை செய்து, காமன் மரம் எரிக்கப்படவுள்ளது.