பதிவு செய்த நாள்
27
பிப்
2015
12:02
பவானி: பவானி செல்லியாண்டியம்மன் - மாரியம்மன் கோவில்களில், ஆண்டு தோறும் மாசி மாதம் மாசி திருவிழா நடப்பது வழக்கம்.இந்தாண்டு, கடந்த, 17ம் தேதி இரவு, 10 மணியளவில், பவானி செல்லியாண்டியம்மன் கோவில், பவானி, பழனிபுரம் பட்டதரசியம்மன் கோவில், மேற்கு தெரு மாரியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் போன்றவைகளில் பூச்சாட்டுதல் நிகழ்சியுடன், பொங்கல் விழா தொடங்கியது. இதனை தொடர்ந்து, 24ம் தேதி இரவு, 9 மணியளவில், காவிரி ஆற்றில் இருந்து பூஜை செய்து, கொண்டு வரப்பட்ட கம்பம், வர்ணபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, பக்தர்களால் சுமந்து வரப்பட்டு இரவு, 10 மணியளவில் கோவில் வளாகத்தில், கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து, சமயபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்தில் அருள் பாலித்தார். அதேபோல், செல்லியாண்டியம்மன் கோவிலில் கொடியேற்றப்பட்டு, பொங்கல் விழா துவங்கியது.மார்ச், 2ம் தேதி, தமிழகத்திலேயே எந்த ஒரு கோவிலிலும் இல்லாத வகையில், மூலவரான அம்மனுக்கு, புனித நீர் ஊற்றுதல் விடிய விடிய நடக்கிறது. இதனை தொடர்ந்து, 4ம் தேதி முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நடைபெற உள்ளது. பின்னர், 5ம் தேதி தேரோட்டம், கம்பம் எடுத்தல், 6ம் தேதி பரிவேட்டை, 7ம் தேதி தெ ப்போற்சவம், 8ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா முடிவடைகிறது.நேற்று நடந்த கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சியில், வர்ணபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கட்டளைதாரர்கள், மெரவணைதாரர்கள் என பலர் பங்கேற்றனர்.