பதிவு செய்த நாள்
28
பிப்
2015
11:02
அவிநாசி: பூண்டியில் உள்ள மகாமக குளத்தில், தெப்போற்சவ பெருவிழா, வரும் 6ல் நடைபெறுகிறது. திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் மகாமக குளம், கரிவரதராஜப் பெருமாள் கோவில் அருகே அமைந்துள்ளது. சுற்றிலும் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குளத்தில் தேங்கி துர்நாற்றம் வீசியது. புராதனமிக்க கோவில் குளத்தின் அழகு சீரழிக்கப்பட்டது, பக்தர்களை வேதனையடையச் செய்தது. குளத்தை சீரமைக்க, திருப்பூர் சைவ சித்தாந்த சபை அறக்கட்டளை முன்வந்தது. படித்துறை, நீராழி மண்டபம் புதிதாக கட்டப்பட்டு, கழிவுநீர் வெளியேற்றப்பட்டது. வரும் 3ல் குளத்தில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம் கூறுகையில், ""புண்ணியமிக்க மகாமக குளத்தில் நீராடினால், பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். வரும் 6ம் தேதி மாலை 6:00 மணிக்கு தெப்போற்சவம் நடைபெறும், என்றார். செயல் அலுவலர் சரவணபவன் கூறுகையில், ""தெப்போற்சவத்தன்று, பூ வேலைப்பாடுகளுடன் கூடிய தெப்பம் கட்டப்பட்டு, உற்சவமூர்த்திக்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடத்தப்படும். அதன்பின், 9 சுற்றுகள் குளத்தில், சுவாமி வலம் வருவார். அப்போது, மழை பொழிவதற்கான ராகங்களை, நாதஸ்வர குழுவினர் இசைப்பர், என்றார்.