பதிவு செய்த நாள்
02
மார்
2015
11:03
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும், மாசி பிரம்மோற்சவ விழாவில், உற்சவர் முருகப் பெருமான், புலி, யானை வாகனங்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி முருகன் கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா, கடந்த மாதம், 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனையும், உற்சவர் முருகப் பெருமான் காலை, இரவு ஆகிய இரண்டு வேளைகளில், ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று முன்தினம் விழாவின், ஆறாம் நாளில், மாலை 4:30 மணிக்கு, புலி வாகனத்திலும், இரவு 7:30 மணிக்கு, யானை வாகனத்திலும் உற்சவர் முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில், மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, இரவு 7:00 மணிக்கு, தங்கத்தேரில் உற்சவர் வீதியுலா வந்தார். விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, மூலவரை வழிபட்டனர். இன்று, காலை 9:30 மணிக்கு, யாளி வாகனத்தில் வீதியுலாவும், மாலை 4:30 மணிக்கு, மலைக்கோவிலில் இருந்து, உற்சவ பெருமான் கோட்டா ஆறுமுக சுவாமி கோவிலுக்கு சென்று, அங்கிருந்து மீண்டும் மலைக்கோவிலுக்கு வந்து, நள்ளிரவு 1:00 மணிக்கு, குதிரை வாகனத்தில் வீதியுலா வருகிறார். நாளை, அதிகாலை 5:00 மணிக்கு, திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.