பழநி : மாசிமகத்தை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் உலகநன்மை வேண்டி 1008 சங்காபிஷேகம், சிறப்பு யாகபூஜை நடந்தது. பழநி மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் தலைமை குருக்கள் அமிர்தம் தலைமையில் யாகசாலை அமைத்து இருந்தனர். 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பி ஒன்பது கலசங்கள் வைத்து, கணபதிஹோமம், ஸ்கந்தயாகம் மற்றும் வேதமந்திரங்கள் ஓதினர். மாசிமகத்தை முன்னிட்டு உலக நலன் வேண்டி சிறப்பு யாகபூஜை நடந்தது. உச்சிகாலபூஜையில் மூலவர் ஞான தண்டாயுதபாணிக்கு புனித கும்பநீர் அபிஷேகம், சங்காபிஷேகம், சிறப்பு அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான வெளியூர் பக்தர்கள் காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.