சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று தீவிர சோதனைக்கு பின்னரே பக்தர்களை போலீசார் கோவிலுக்குள் அனுமதித்தனர். கடல் வழியாக தீவிரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவுவதை தடுக்க போலீசார் உஷாராக இருக்கிறார்களா என்பதற்காக உள்துறை சார்பில் போலீசார் அடிக்கடி உஷார் படுத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று முதல் ஆபரேஷன் ஹம்லா என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கடலோர பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அதனையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் கீழ வாயில், தெற்கு வாயில் இரண்டிலும் போலீசார் மெட்டல் டிடெக்டர் வாயில் அமைத்து பக்தர்களை நீண்ட சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்தனர். மற்ற இரண்டு வாயில்கள் அடைக்கப்பட்டன. 24ம் தேதி வரை இந்த சோதனை நடத்தப்படுகிறது.