பதிவு செய்த நாள்
24
ஜூன்
2011
11:06
விழுப்புரம் : மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் மணிமேகலை தலைமை தாங்கினார். டி.ஆர். ஓ.,வெங்கடாஜலம், கோவில் உதவி ஆணையர் குமரதுரை முன்னிலை வகித்தனர். செஞ்சி தாசில்தார் வீரப்பன், நெடுஞ்சாலைத் துறை உதவி செயற் பொறியாளர் பெர்சிலின் செல்வராஜ், சுகாதாரத்துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் சம்பத், அரசு போக்குவரத்துக் கழக உதவி மேலாளர் கோவிந்தராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் மணிமேகலை பேசியதாவது: மேல்மலையனூர் கோவிலில் இருந்து தற்காலிக பஸ் நிலையம் வரை மின் விளக்கு வசதியும், பல இடங்களில் சின்டெக்ஸ் டேங்க் வைத்து குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. கோவில் அருகிலுள்ள அக்னி குளத்தை சுற்றிலும் சுத்தம் செய்து சுற்றுச் சுவர் கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்து சுற்றுலாத் துறை அனுமதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அனுமதி கிடைத் ததும் பணிகள் துவக்கப்படும். அமாவாசையன்று பஸ்களை மாலை 4 மணிக்கு மேல் ஊரினுள் அனுமதிக்காமல் தற்காலிக பஸ் நிலையத்தில் நிறுத்த வேண்டும். மின்சார பிரச்னைகளை சரி செய்ய 20 பணியாளர்கள் தயார் நிலையில் இருப்பார்கள். கோவிலில் அடிப்படை வசதிகளை புதுப்பிக்கவும், கூடுதலாக அடிப்படை வசதிகளை செய்யவும் மாஸ்டர் பிளான் தயார் செய்து, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஒப்புதல் பெறப் பட்டுள்ளது. பணிகள் அனைத்தும் நிதி வசதிப்படி படிப்படியாக நிறைவேற்றப்படும். பாதுகாப்பு பணிகளை போலீசார் செய்து வருகின்றனர். அனுமதியின்றி வைக்கும் தற்காலிக கடைகள், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் வளாகத்தில் மருத்துவக் குழு, தீயணைப்பு துறையினரும் தயார் நிலையில் இருப்பர். கோவிலில் 17.50 லட்சம் ரூபாயில் கட்டப்படும் கிழக்கு நுழைவு வாயில், 63.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும் மண்டபம் கட்டும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் காவல் துறைக்கும், கோவில் நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு கலெக்டர் மணிமேகலை பேசினார்.