பதிவு செய்த நாள்
21
மார்
2015
03:03
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் ஒரு மணி நேரம் முன்னதாக உற்சவத்தை துவக்கினர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்க கவசம் அணிவித்தனர். இரவு 9 மணி முதல் கூட்டம் அலை மோதியது. இதனால் இரவு 12 மணிக்கு துவங்கும் ஊஞ்சல் உற்சவத்தை போலீசார் கேட்டு கொண்டதால் ஒரு மணி நேரம் முன்னதாக துவக்கினர். ஊஞ்சல் மண்டபத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதும், பக்தர்களும், கோவில் பூசாரிகளும் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். இரவு 12.40 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது. இந்து சமாய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் தலைவர் வடிவேல், தலைமை பூசாரி சேகர் மற்றும் அறங்காவலர்கள், மேலாளர்கள் முனியப்பன், மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். செஞ்சி டி.எஸ்.பி., முரளிதரன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடலுõர் எஸ்.பி., ராதிகா பாதுகாப்பு பணிகளை மேற்பார்வை செய்தார். பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று சனிக்கிழமை தெலுங்கு வருடபிறப்பும், நாளை ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் வழக்கத்தை விட கூடுதலாக பக்தர்கள் குவிந்திருந்தனர். இதனால் கோவில் பகுதி மட்டுமின்றி மேல்மலையனூரின் சாலைகளிலும் நெரிசல் காணப்பட்டது.