விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த பிப்., 2ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து 48 நாட்கள் சிறப்பு பூஜைகள் பூர்த்தியடைந்ததை தொடர்ந்து, கோவிலில் மண்டலாபிஷேகம் பூர்த்தி விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7:30 மணிக்கு புண்யாவதனம், 8:00 மணிக்கு அக்னி பிரதிஷ்டை, பஞ்சசூத்திரம் ஹோமங்கள், மகா பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து 11:20 மணிக்கு நவக்கலச திருமஞ்சனம், பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், கோவில் உட்பிரகார புறப்பாடு நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பட்டாச்சாரியார் வெங்கடேஷ்பாபு மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.