பதிவு செய்த நாள்
23
மார்
2015
12:03
ஊட்டி: ஊட்டி காந்தல் குருசடியில் உலக அமைதி, சகோதரத்துவத்தை வலியுறுத்தி, தவகால பரிகார பவனி நடந்தது. ஏசு கிறிஸ்து, சிலுவையில் அறையுண்டு, இறந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழும் ஈஸ்டர் திருநாளை, தவக்கால நிகழ்வாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சார்பில், ஊட்டியில் நேற்று தவக்கால பரிகார பவனி நடந்தது. ஊட்டி இருதய ஆண்டவர் தேவாலயத்தில் துவங்கிய பவனி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக, காந்தல் குருசடி திருத்தலத்தை சென்றடைந்தது. முடிவில், கூட்டுப்பாடல் திருப்பலியை தலைமையேற்று நடத்திய ஊட்டி மறை மாவட்ட பிஷப் அமல்ராஜ் கூறுகையில்,“உலக அமைதி, சகோதரத்துவம் மேம்பட வேண்டும்; மனித நேயம் வளர வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து, இந்த பவனி நடத்தப்படுகிறது,” என்றார். பின், அன்னதானம் வழங்கப்பட்டது. பவனியில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.