பதிவு செய்த நாள்
24
மார்
2015
10:03
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில் பங்குனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந் தது. திருவள்ளூர், திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில், பங்குனி பிரம்மோற்சவ விழா, கடந்த 15ம் தேதி துவங்கியது. தினசரி பல்வேறு அலங்காரத்தில் உற்சவர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கடந்த 17ம் தேதி அதிகார நந்தி சேவையும், 19ம் தேதி இரவு, ரிஷப வாகனத்தில் புறப்பாடும், பஞ்சமூர்த்தி தரிசனமும் நடந்தன. நேற்று முன்தினம் காலை, திருமுறை உற்சவம், நால்வர் புறப்பாடு நடைபெற்றன. அன்று இரவு 7:00 மணிக்கு, தீர்த்தீஸ்வரருக்கும், திரிபுரசுந்தரி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. சீர்வரிசை தட்டுகள் வைக்கப்பட்டு, மாங்கல்ய தாரண நிகழ்ச்சி நடைபெற்ற போது, ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர். இரவு 9:00 மணிக்கு, குதிரை வாகனத்தில் உற்சவர் வீதியுலா நடைபெற்றது. நேற்று காலை 7:00 மணிக்கு சிவிகை பல்லக்கிலும், இரவு 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கிலும் தீர்த்தீஸ்வரர் புறப் பாடு நடைபெற்றது. இன்று காலை 7:00 மணிக்கு நடராஜர் அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு ராவணேஸ்வர வாகனத்தில் தீர்த்தீஸ்வரர் வீதியுலா வருகிறார். நாளை (மார்ச் 25) காலை 7:00 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு தொட்டி உற்சவம், பந்தம்பரி நிகழ்ச்சியுடன் பங்குனி பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.