பதிவு செய்த நாள்
24
மார்
2015
11:03
பேரூர் : பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தேர் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கோவையில் மிகவும் பழமையான கோவில்களில், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலும் ஒன்று. இக்கோவிலில் பங்குனி உத்திரத்தேர் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். அதேபோல், இந்த ஆண்டும் பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.முதல் நாளான, நாளை காலை, 7:30 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் நடக்கிறது. தொடர்ந்து, காலை, 8:30 மணியளவில் பங்குனி உத்திரத்தேர்விழா கொடியேற்றம் நடக்கிறது. இதேபோல், ஆறு நாட்களும் பஞ்சமூர்த்திக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஏழாவது நாளான மார்ச், 31ம் தேதி மாலை, 4:30 மணிக்கு திருத்தேர் திருவிழா நடைபெறும். உள்ளூர் மட்டுமின்றி வெளியூரை சேர்ந்த ஏராளமானோர் வருவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.