சிவசைலம் கோயிலில் 29ம் தேதி கொடிமரத்திற்கு பாலாலயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2011 10:06
ஆழ்வார்குறிச்சி : சிவசைலம் சிவசைலநாதர்-பரமகல்யாணி அம்பாள் கோயில் கொடிமரத்திற்கு வரும் 29ம் தேதி பாலாலயம் நடக்கிறது. ஆழ்வார்குறிச்சிக்கு மேற்கே சிவசைலத்தில் மிகப் பிரசித்தி பெற்ற சிவஸ்தலம் உள்ளது. இங்கு சிவசைலநாதர் - பரமகல்யாணி அம்பாள் மேற்கு நோக்கி அமர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் 21ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து வரும் ஜூலை 9ம் தேதி முதலாவது வருஷாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த 18ம் தேதி இக்கோயிலில் உள்ள கொடிமரம் திடீரென முறிந்து விழுந்தது. கொடிமரம் கடந்த 1975ம் ஆண்டு வைக்கப்பட்டது. கொடிமரம் திடீரென விழுந்த நிலையில் வரும் 29ம் தேதி காலை கொடிமரத்திற்கு பாலாலயம் நடக்க உள்ளது. வரும் 28ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் பாலாலய நிகழ்வுகள் துவங்குகிறது. தொடர்ந்து ஹோமங்கள், சிறப்பு பூஜைகள், விசேஷ தீபாராதனைகள் நடக்கிறது. 29ம் தேதி அதிகாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில் தலைமை பூசாரி பிச்சை குருக்கள் பாலாலய வைபவத்தை நடத்துகிறார். தற்போது கோயிலுக்கு உள்ளாகவே சுமார் 20 அடி உயரத்தில் பாலாலயத்திற்கான கொடிமரம் அமைக்கப்பட உள்ளது. பாலாலயம் முடிந்து பின்னர் பெரிய அளவிலான கொடிமரம் அமைக்கப்படும்.