பதிவு செய்த நாள்
25
மார்
2015
11:03
உடுமலை : உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, நகரில் உள்ள முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் முன்னிலையில், தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் வாசிக்கப்பட்டு, விழாவுக்கான நோன்பு சாட்டப்பட்டது. மேலும், மூலவர் மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நோன்பு சாட்டுதலையடுத்து, தேரோட்ட நாள் வரை தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடக்கிறது. வரும் 31ம்தேதி இரவு, 7:00 மணிக்கு, கம்பம் போடுதலும், ஏப்., 2ம் தேதி நள்ளிரவு, 12:00 மணிக்கு, கிராமசாந்தி, வாஸ்து சாந்தியும் நடக்கின்றன. ஏப்., 3ம் தேதி மதியம், 12:30 மணிக்கு, சிறப்பு பூஜைகளுடன் தேர்த்திருவிழாவுக்கான கொடியேற்றப்படுகிறது. கொடியேற்றத்தை தொடர்ந்து, மதியம், 2:00 மணிக்கு, பூவோடு ஆரம்பம், அம்மன் வீதியுலா நிகழ்ச்சிகளும் நடக்கின்றன; ஏப்., 7 ல் சிறப்பு அலங்கார நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றன. ஏப்., 8ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு, மாவிளக்கு பூஜையும், பிற்பகல், 3:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. ஏப்., 9 ம்தேதி காலை, 6:45 மணிக்கு, அம்மன் திருத்தேரில் எழுந்தருளுகிறார்; அன்று மாலை, 4:00 மணிக்கு, திருத்தேரோட்டம் நடக்கிறது. நோன்பு சாட்டுதலையடுத்து, தேர்த்திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.