பதிவு செய்த நாள்
26
மார்
2015
12:03
திருத்தணி: சேகர்வர்மா நகரில் உள்ள சக்தி கணபதி கோவிலில், நேற்று, இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, சிறப்பு ஹோமம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தன. திருத்தணி நகராட்சியில் உள்ள சேகர்வர்மா நகரில், சக்தி கணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி, காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை, கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, 18 கலசங்கள் வைத்து, சிறப்பு கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, 108 சங்காபிஷேகம் நடந்தது. பிற்பகல் 1:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. மாலை 5:00 மணி முதல், 6:00 மணி வரை, ஆன்மிக சொற்பொழிவு மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.