பதிவு செய்த நாள்
26
மார்
2015
01:03
திருத்தணி: விஜய வழித்துணை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் நவக்கிரக சிலைகள் பிரதிஷ்டை விழா, நேற்று நடந்தது. திருத்தணி அடுத்த அமிர்தாபுரம் பகுதியில் உள்ள, விஜய வழித்துணை விநாயகர் கோவிலின் திருப்பணிகள் நடந்தது. மேலும், புதியதாக நவக்கிரக சிலைகள் நேற்று காலை பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதையொட்டி, கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, 18 கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம், மூன்று கால பூஜைகள் நடந்தது. காலை 9:00 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, கோவில் கோபுரம், நவக்கிரக சிலைகள் மீது கலசநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காலை 10:00 மணிக்கு, மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. இரவு 7:00 மணிக்கு, உற்சவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.