பதிவு செய்த நாள்
27
ஜூன்
2011
10:06
கோவை : திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் இந்து தர்ம பிரசார பரிஷத் சார்பில் ஸ்ரீ ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.வரும் 30ம் தேதி அவிநாசி ரோட்டிலுள்ள கொடீசியா வளாகம் அருகே, மாலை 4.00 மணியளவில் இத்திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சத்தியநாராயணா, திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சுப்ரமணியம், திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் நாகிரெட்டி, திருமலை தேவஸ்தான இணைச் செயல் அலுவலர் யுவராஜ், திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் ஸ்ரீநிவாசராஜ், தேவஸ்தான இந்து தர்ம பிரசார பரிஷத் செயலாளர் காசிரெட்டி வெங்கட்ரெட்டி மற்றும் தேவஸ்தான உறுப்பினர்கள் முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில், சுமங்கலி ஜூவல்லரி தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது: இத்திருக்கல்யாண உற்சவம் திருமலையில் நாள்தோறும் நடக்கிறது. ஏழை, எளிய மக்களால் அதிக செலவு செய்து இந்நிகழ்ச்சியை காண முடியாது. அவர்கள் வேண்டுதல் நிறைவேறவும், வேதனைகள் தீர்க்கவும், திருமலை சென்று ஸ்ரீநிவாச பெருமாளை தரிசனம் செய்ய முடியாது. அவ்வாறு, தரிசனம் செய்ய முடியாத பல்லாயிரக் கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் அளிக்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. திருமலையில் எப்படி திருமணம் நடத்தப்படுகிறதோ, அதே போல் அங்குள்ள உற்சவமூர்த்திகளோடு, அதே பட்டாச்சாரியார்களை கொண்டு, ஆகம முறைப்படி கோவையில் இத்திருமணம் நடத்தப்படுகிறது. இதற்கான அனுமதி இலவசம். பிரசாதம், குடிநீர் மற்றும் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் இலவசமாக வழங்கப்படுகிறது. திறந்த வெளியில் அனைவரும் பார்க்கும் வகையில் இருக்கை வசதி செய்து தரப்படுகிறது. இதில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திருமண உற்சவத்தை பார்க்கும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்பது ஐதீகம். மக்கள் அனைவரும் கலந்துகொண்டு அருள்பெற வேண்டும். இவ்வாறு, விஸ்வநாதன் கூறினார். விழா கமிட்டிகள் தர்மராஜ், ஆலால சுந்தரம், சம்பந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.