பதிவு செய்த நாள்
27
ஜூன்
2011
10:06
வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காட்டில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், "சம்போ மகாதேவா என்ற பக்தர்களின் பரவச கோஷத்துடன் வெகு விமர்சையாக நடந்தது. வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காட்டில், வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலை சேர்ந்த, மையார் தடங்கண்ணி உடனுறை அமிர்தகடேஸ்வர் கோவில் அமைந்துள்ளது. சைவ குரவர்கள் நால்வரில் சுந்தரரால் பாடல் பெற்றது. வடக்கே நர்மதை ஆற்றங்கரையை சேர்ந்த குழக முனிவர், இங்கு இறைவனை பூஜித்து முக்தியடைந்த ஸ்தலமாகும். வாயுத்தேவன் அமிர்தகலசத்தை தேவலோகத்துக்கு எடுத்துச் செல்லும்போது சிந்திய அமிர்தம், பூமியில் சிதறி, இங்குள்ள சிவலிங்கமாக உருமாறியது என்பது ஸ்தல வரலாறு. இக்கோவிலில் முருகப்பெருமான், குழகர் (இளமை மாறாதவர்) என்ற பெயரில், ஒருமுகம் ஆறு கரங்களுடன் காட்சியளிக்கிறார். 70 ஆண்டுகளுக்கு பின் கோவில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அரசு நிதி 11 லட்ச ரூபாய் மற்றும் உபயதாரர்களுடன் உதவியுடன் சேர்த்து 50 லட்ச ரூபாயில் திருப்பணிகள் செய்யப்பட்டன. பல்வேறு சிறப்புமிக்க இக்கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கடந்த மூன்று நாட்களாக யாகசாலை பூஜையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் அடங்கிய கலசங்கள், யாகசாலையில் இருந்து மேளதாளங்களுடன் காலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. காலை 10.45 மணிக்கு, கோபுர கலசம், விமான கலசம், மூல விக்ர கலசங்களில் சிவாச்சாரியார்கள், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்வித்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் "சம்போ மகாதேவா என்று கோஷம் எழுப்பி பக்தி பரவசம் அடைந்தனர். தொடர்ந்து ஸ்வாமிக்கு சிறப்பு பூஜையும், தீபராதனையும் நடந்தது. மாலையில், ஸ்வாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. வேதாரண்யம் எம்.எல்.ஏ., ராமராஜ் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கிராமவாசிகளும், உபயதாரர்களும் செய்திருந்தனர்.